அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளியில் பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முன்னாள் ஆசிரியர் துளசிங்கம் அவர்களின் நினைவாக, அவரது மகனும் இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான சீனிவாசன், கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டில், 10-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற தேஜேஸ்வர் மற்றும் 12-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற ஜெகதீசன் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.த. விஜயகுமார் தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பிரதிநிதியும் இயற்பியல் ஆசிரியருமான மு. தணிகைவேல் முன்னிலையில், சீனிவாசன் மாணவர்களுக்கு பரிசுத் தொகையை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இந்த கல்விச் சேவையை மேற்கொண்டு வரும் சீனிவாசனின் சமூகப் பங்களிப்பை முன்னாள் மாணவர்கள் பாராட்டினர். மேலும், பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் இதுபோன்ற சேவைகளில் மேலும் பல முன்னாள் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர்கள் தெரிவித்தனர்.