மன்னார்குடி., ஜூன்.30
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான பொன்னியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆணி திருவிழா கடந்த 23ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினம்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்ற வருகிறது. முக்கிய விழாவான முளைப்பாரி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இதில் காரிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பொன்னியம்மன் கோவிலிலிருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர் சாவடியை வந்தடைந்தது.
அங்கு பெண்கள் கும்மியடித்து நாட்டுப்புற பக்தி பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து காரிய அழகர் அய்யனார் கோவிலை சுற்றி வளம் வந்து அருகில் உள்ள ஏரிக்கரையை அடைந்து முளைப்பாரிகளை தண்ணீரில் விட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நாளை சிம்ம வாகன வீதி உலா நிகழ்ச்சியும் 3 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் புஷ்ப பல்லுக்கு வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.