சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் பேருந்து நிலையத்தில், நீர் பாதுகாப்பு சங்கம், விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளின் முழு கடனையும், பெரு விவசாயிகளின் பயிர்க் கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தனர்.
ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி நீண்ட காலம் ஆகியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். எனவே, தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தங்களது கோரிக்கைக்கு அரசு விரைவில் உரிய தீர்வு வழங்காவிட்டால், அடுத்த கட்டமாக சென்னை சென்று மாபெரும் பேரணி நடத்தி, தலைமைச் செயலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.