நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே உள்ள ஆற்றாங்கரைத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு திருமருகல் துணை மின்நிலையத்திலிருந்து மின் கம்பங்கள் மூலம் வீடுகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே அமைந்துள்ள மின் கம்பம் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் காணப்படுவதால், அது எந்த நேரத்திலும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அக்குளத்தை அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பே சாய்ந்துள்ள மின் கம்பத்தை ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகமும் மின்வாரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.