தர்மபுரி, ஜூலை 2:
மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான 12675/12676 கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் 16315/16316 திருவனந்தபுரம்–மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரக்கோணம்–சேலம் மெமு ரயிலுக்கு கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததுபோல் டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும் எனவும் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் தென்னக ரயில்வே பயணிகள் சங்கம், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் இணைந்து கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் மேற்கண்ட ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிரந்தர நிறுத்தம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தென்னக ரயில்வே பயணிகள் சங்கத்தின் தலைவர் காமராஜ், செயலாளர் அறிவழகன், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஆசாம்கான், செயலாளர் ஜெபசிங், துணைத் தலைவர் சங்கீதாஸ்ரீ, துணைச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், ரஃபீக் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் முருகன், கேசவன், கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.