மன்னார்குடி., ஜூலை.02
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மாங்கனி வரசித்தி விநாயகர் ஆலயம் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயம். பல்வேறு சிறப்புக்குரிய இவ்வாலயத்தின் திருப்பணி பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இன்று மகா குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 3 நாட்களாக 4-கால யாகசாலை பூஜைகள் ஏராளமான வேதவிற்பன்னர்களைக் கொண்டு யாக வேள்வி நடத்தப்பட்டன. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹ_தி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய சிவாச்சாரியார்கள் புனித தீர்த்த கடங்களை சுமந்து ஆலயத்தினை வலம்வந்து மூலஸ்தான கோபுர விமான கலசத்தை அடைந்தனர்.
பின்னர் கோபுர விமான கலசத்தின் மீது வண்ண வண்ண மலர்களால் சிறப்பு பூஜைகளை நடத்திய சிவாச்சாரியார்கள் தொடர்ந்து கோபுர விமான கலசங்கள் மீது கடங்களில் இருந்து புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோபுர விமான கலசத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழாவினை கண்டு வழிபட்ட திரளான பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை அடுத்து மூலவர் ஸ்ரீமாங்கனி வரசித்தி விநாயகர் மற்றும் பிரதான பிரகார சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சநேயர் , ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ வாசுதேவ பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.