நாகப்பட்டினம்,ஜூலை.2-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் மேலரத வீதியில் செல்வ விநாயகர், மந்த கருப்பண்ண சுவாமி, ஏழைகாத்தம்மன், காளியம்மன், மின்னடியான் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் நேற்று கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழா கடந்த 29- ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாக காலை பூஜைகள், மகா பூர்ணாஹதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து 10.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித கடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரங்களை அடைந்து 11 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் 18 வது குரு மகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.