தண்ணீர் அமைப்பு மற்றும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில்ஜுலை 3 ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினத்தை முன்னிட்டு “பிளாஸ்டிக் என்னும் எமன்” என்ற புத்தகம் வெளியிட்டு, துணிப்பை வழங்கும் நிகழ்வு
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.கல்லூரி செயலர் அருட்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் உமா மகேஸ்வரி, தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம்,யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற செயலாளர் பேராசிரியர் முனைவர் கி. சதீஷ்குமார் உறுதிமொழி வாசிக்க கல்லூரி இளங்கலை, முதுகலை மாணவிகள் உறுதியேற்றனர்.
நிகழ்வில் உலகநாடுகள் 2002-ஆம் ஆண்டு மெல்லிய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடைவிதித்தன. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜுலை 3ஆம் தேதி உலக பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழல் சீர்கேட்டில் முக்கியப் பங்குவகிக்கும் பிளாஸ்டிக் பைகள் ‘பாலி எத்திலின்’ என்ற வேதிப் பொருளால் ஆனவை. இவை மக்கி சிதைய பல ஆண்டுகளாவதோடு மண்ணில் உள்ள சத்துப் பொருள்களுக்கு மிகப் பெரிய அளவில் கெடுதல் புரிகின்றன.
உலகளவில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு தனிமனிதனும் ஆண்டு சுமார் 160 பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறிகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப் படுபவையாகும். எனவே நெகிழிபயன்பாட்டை தவிர்த்து துணிப்பை பயன்பாட்டை அதிகரித்து ஒவ்வொருவரும் வீடுகள் தொடங்கி அலுவலக அன்றாட பயன்பாட்டிற்கு துணிப்பையைப் பயன்படுத்துவோம்.துணிப்பை பயன்படுத்தி பூமி பந்தை பாதுகாப்போம் நெகிழி இல்லா நச்சில்லா புவியை அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ரோஸ்லின் மேரி, முனைவர் புவனேஸ்வரி, முனைவர் பானுமதி, ஆசிரியப் பெருமக்கள் முனைவர் இல. கோவிந்தன், முனைவர் லிண்டா, சுவாதி, இளங்கலை, முதுகலை மாணவர்கள், கல்லூரி பணியாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.