நிருபர் எஸ். திருபாலா அந்தியூர்
ஈரோடு: ஈரோடு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சார்பில் அந்தியூர், பர்கூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) கார்த்தி தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்த தலைமை காவலர்கள் முத்துக்குமார், சண்முகசுந்தரம், ஜெகநாதன் மற்றும் காவலர்கள் கார்த்தி, கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டப்பட்டனர்.
அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் இதே அர்ப்பணிப்புடனும் விழிப்புடனும் தொடர்ந்து செயல்படுமாறு வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்தார்.