வேலூர் நிருபர் ராமச்சந்திரன்
வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் அருகிலுள்ள அருகந்தம் முண்டி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் மிகுந்த விமர்சையாகவும், ஆன்மிக எழுச்சியுடனும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, சிறப்பு வேத பாராயணங்கள் மற்றும் தேவார, திருப்புகழ் பாராயணங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான கும்பாபிஷேக தினத்தில், புனித தீர்த்தக் குடங்கள் யாகசாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆலய விமான கலசங்கள் மற்றும் மூலவருக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் மகா ஆரத்தி நடைபெற்றது. நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக மேற்கொண்டனர். மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.