நாகப்பட்டினம்,ஜூலை.12-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் கிராமத்தில் விநாயகர், சீதளாதேவி மாரியம்மன், பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் நேற்று கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழா கடந்த 10- ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து யாக காலை பூஜைகள், மகா பூர்ணாஹதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித கடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரங்களை அடைந்து 11 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் போலகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
அதேபோல் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள யோகமாரியம்மன் கோவில் குடமுழுக்கு கடந்த 10-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பல்வேறு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு 10 மணிக்கு விமானம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.