2-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில் மீனாட்சி அலங்காரம் – பக்தர்கள் திரளாக தரிசனம்…
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி. புதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில், 2-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மதுரை மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் காளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று நடைபெற்ற மதுரை மீனாட்சி அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்து அம்மனின் அருளைப் பெற்றனர்.அடுத்த வெள்ளி கிழமையில் அம்மனுக்கு அய்யாவாடி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி அலங்காரம் செய்யப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோவிலில் 15-வது ஆண்டு ஆடி தீமிதி திருவிழா ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. ஞானசேகரன் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், தினமும் யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
இந்த திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனின் அருளைப் பெறுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.