கோவை: வரலாற்றுச் சிறப்புமிக்க கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் காணப்படும் அரிய கல் சிற்பங்களை உருவாக்கிய விஸ்வகர்மா சிற்பிகளின் பாரம்பரியத்திற்கும், அவர்களின் கலைப் பங்களிப்பிற்கும் தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் சிற்பக்கலை என்பது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், முன்னோர்களின் கலைத் திறனுக்கான அழியாச் சான்றாகவும் விளங்குகிறது. பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளில், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த யூ.எம்.டி. ராஜாவின் முப்பாட்டனார் பொன்னாசாரி அவர்கள் தனது கைவண்ணத்தால் அரிய கலைப்பணிகளைச் செய்துள்ளதாக குடும்ப மரபுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கோவில்களுக்கு உயிரூட்டிய விஸ்வகர்மா சிற்பிகளின் பெயர்களும், அவர்களின் கலைப் பாரம்பரியமும் வரலாற்றில் போதிய அளவில் பதிவுசெய்யப்படாததுடன், உரிய அரசு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்று யூ.எம்.டி. ராஜா தெரிவித்துள்ளார்.
எனவே, விஸ்வகர்மா சிற்பிகளின் வரலாற்றைப் பதிவு செய்து பாதுகாக்கவும், பாரம்பரிய சிற்பக் கலைக்கு அரசு அங்கீகாரம் வழங்கவும், சிற்பிகளின் பெயர்களை ஆவணப்படுத்தவும், இளம் தலைமுறையினர் இக்கலையைத் தொடர ஊக்கத் திட்டங்கள் மற்றும் பயிற்சி மையங்களை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“கலை வாழ வேண்டும்; கலைஞன் மதிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையுடன், விஸ்வகர்மா சிற்பிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
— செய்திக்குறிப்பு
யூ.எம்.டி. ராஜா
முப்பாட்டனார் பொன்னாசாரி அவர்களின் பேரன்
(மூன்றாம் தலைமுறை)
கோவை, குனியமுத்தூர்