கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான சுகுணா பிரீமியர் லீக் (எஸ்.பி.எல்.) கிரிக்கெட் போட்டி நடைபெற்றது..
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 16 பள்ளி அணிகள் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்துகின்றன.
போட்டியின் துவக்க விழாவில் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, சுகுணா இன்டர்நேஷனல் பள்ளியின் இணை நிர்வாக இயக்குநர் சாந்தினி அனீஷ் குமார், சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
முன்னதாக போட்டிகளை டி.என்.பி.எல். முன்னாள் வீரரும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) லெவல்-1 பயிற்சியாளருமான சேனாதிபதி கபாலீஸ்வரன், துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அதிரடி ஆட்டங்களையே அதிகம் விரும்புவதாக தெரிவித்தார். நவீன தொழில்நுட்ப வசதிகள் கிரிக்கெட் பயிற்சியை மேலும் மேம்படுத்தி வருவதாகவும், குறிப்பாக தானியங்கி பவுலிங் இயந்திரங்கள் மூலம் வீரர்களுக்கு தரமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதுபோன்ற போட்டிகள் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, எதிர்கால கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் சிறந்த தளமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், விறுவிறுப்பான லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற உள்ளதால், போட்டிகள் மீது மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடதக்கது..