கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அமைந்துள்ள ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்ட நாள் முதல், ஞானத்தின் வடிவமாகவும் தீய சக்திகளை அழிக்கும் சக்தி கொண்டதாகவும் கருதப்படும் முருகப்பெருமானின் முதன்மை ஆயுதமான “வேல்” இல்லாமல் இருந்து வந்தது.
இதை உணர்ந்த அப்பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் அவர்கள் தலைமையில் 19 பக்தர்கள் ஒன்றாக இணைந்து, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்காக 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட வேல் ஒன்றை வடித்துள்ளனர்.தயாரிக்கப்பட்ட அந்தப் பெருமைமிக்க இறைவனின் சக்திவேல், இன்று (ஆகஸ்ட் 05) பக்திப் பெருக்குடன் ராஜகோபுரத்தின் உச்சியில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கம்பீரமாக நிலைநிறுத்தப்பட்டது.
வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்கும் ராஜகோபுரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான கிராம மக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு “அரோகரா” கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.