சென்னை சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின் சார்பில் மலேசிய அரசின் ஏற்பாட்டில் பினாங் மாநிலத்தில் சர்வதேச ஓபன் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில், சீனா, மலேசியா, கனடா உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் சார்பில் சென்னையில் இயங்கி வரும் குளோபல் சிலம்பம் அகாடமியை சேர்ந்த 22 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
தனித்திறமை, ஆயுத பெருக்கம், சண்டையிடுதல் உள்ளிட்ட 44 பிரிவுகளில் வயது மற்றும் எடை அடிப்படையில் வீரர்கள் போட்டியிட்டனர்.இதில், 9 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று தரவரிசையில் நான்காவது இடம் பிடித்தனர். தங்கம் வென்ற வீரர்களில் இருவர் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் மலேசியாவில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் சென்னை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்
இதுகுறித்து குளோபல் சிலம்பம் அகாடமியின் ஆசான் சுந்தரமூர்த்தி கூறுகையில்,
தமிழர்களின் பாரம்பரிய கலையை வெளிநாட்டினர் பலரும் ஆர்வமுடன் பயின்று வருவதை இந்த போட்டியில் கண்கூடாக காணமுடிந்தது. இதற்காக பிரத்யேக பயிற்சி அரங்குகளை அவர்கள் உருவாக்கி பயிற்சி பெறுகின்றனர்.நம் நாட்டில் பாராமுகமாக இருக்கும் இந்த விளையாட்டிற்கு மற்ற விளையாட்டுகளுக்கு உள்ளது போல் தனியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அரசு பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்க வேண்டுமெனவும் அவர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.