நாகப்பட்டினம்,ஆக.5-
நாகை மாவட்டம் திருமருகலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் லட்ச்சார்சனை 10-நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 25-ம் தேதி
லட்ச்சார்சனை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் பூர்த்தியாக நேற்று சத்ருசம்ஹார ஹோமமும், மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமானின் ஆறு முகத்திற்கும் ஆறு விதமான மலர்கள், பழங்கள், நெய்வேத்தியத்துடன் ஷண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செங்குந்த மரபினர்கள் மற்றும் செங்குந்த இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.