புகழ்பெற்ற திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலில், அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூர மகோற்சவத்தின் தொடக்க நிகழ்வான கொடியேற்ற விழா, 05.08.2026 நேற்று பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
ஆடிப்பூரம் என்பது சக்தி வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருநாளாகக் கருதப்படுகிறது. இவ்விழாவையொட்டி, சுவாமி உற்சவர் வீதியில் புறப்பாடு நடைபெற்று கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நடைபெற்றது.
கோவில் கொடிமரத்தில் புனிதக் கொடி ஏற்றப்பட்டதன் மூலம் ஆடிப்பூர மகோற்சவம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்து தரிசித்தனர்.