துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு பகுதி யைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 77; இவர், யாசகம் பெற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அரசு பள்ளிகளுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் வழங்கி வருகிறார்.

சில வாரங்களாக கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் யாசகம் பெற்று, அதன் மூலம் கிடைத்த 10 ஆயிரம் ரூபாயை நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், கலெக்டர் பத்மஜாவை சந்தித்து, அவரிடம் 10 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

பணத்தை பெற்ற கலெக்டர், இதற்குண்டான ரசீதை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

இது குறித்து பூல்பாண்டியன் கூறுகையில், ‘எனது மனைவி பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனது மகன், மகள்களுக்கு திருமணமான நிலையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நான் குடும்பத்தினரை பிரிந்து கடந்த 2010ம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களுக்குச் சென்று யாசகம் பெற்று வருகிறேன்.

இதில் கிடைக்கும் பணத்தை அரசு பள்ளியில் கல்வி உபகரண பொருட்களை வாங்குவதற்காகவும், ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கும், அரசின் பொது நிவாரண நிதிக்கும் வழங்கி வருகிறேன். பல்வேறு மாவட்டங்களில் யாசகம் பெற்று இதுவரை 1.60 கோடி ரூபாய் வழங்கியுள்ளேன்.

தற்போது முதன்முறையாக கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன்’ என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *