தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஆக. 9:
தஞ்சை பாரத் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் மற்றும் கராத்தே அல்டிமேட் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல் சாரிட்டபிள் டிரஸ்ட், எப்-டேக்ஸி மற்றும் மாஸ்கிளிக் டெக்னாலஜி ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், எப்-டேக்ஸி நிறுவனர் சதீஷ், பாரத் கல்வி நிறுவனங்களின் செயலாளரும் நிர்வாக இயக்குநருமான புனிதாகணேசன், ருத்ர சித்தர் சிவகுரு, பின்னணி பாடகர் ஒரத்தநாடு கோபு, மாஸ்கிளிக் டெக்னாலஜி நிர்வாக இயக்குநர் முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
உலக சாதனை நிகழ்ச்சியை அல்டிமேட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் தலைமை செயல் அதிகாரியும் சர்வதேச நடுவருமான டாக்டர் முகமது ஷபீர், அல்டிமேட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் டாக்டர் சோபன்பாபு, செயலாளர் டாக்டர் முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இதில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கண்களை துணியால் கட்டியபடி தொடர்ந்து 40 நிமிடங்கள் சிலம்பம் சுற்றியும், கராத்தே தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியும் சாதனை படைத்தனர்.
இந்த சாதனை அல்டிமேட் உலக சாதனைப் பதிவில் இடம்பெற்றது. இதையடுத்து சாதனை நிகழ்த்திய அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.