நாகப்பட்டினம்,ஆக.9-
திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட குச்சி பள்ளி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆகாயத்தாமரை அகற்றும் பணி
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின் ரோடு பகுதியில் குச்சி பள்ளிவாசல் குளம் உள்ளது. இந்த குளம் முழுவதும் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக கோரிக்கையை ஏற்று பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் நகர்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு குளத்தில் படர்ந்து கிடந்த ஆகாயத்தாமரை செடிகளில் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பேரூராட்சி மக்கள் கோரிக்கை
இதுகுறித்து பேரூராட்சி பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இந்த குளங்களில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் ஆகாயத்தாமரை செடிகளால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அதில் சிறப்பு கவனம் செலுத்தி ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து கிடக்கும் கரிக்குளம், தோப்புக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களிலும் உள்ள செடிகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நீர்நிலை ஆதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.