கோவை:
வருகின்ற 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் யூ.எம்.டி. ராஜா, தனது தேசப்பற்றை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் ஒரு விசித்திரமான மற்றும் ஆபத்தான சாதனையைச் செய்து முடித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர், ஆழமான கிணற்றுத் தண்ணீரின் மேல் வெள்ளை பதாகையை விரித்து, தன் உடம்பைக் கயிறுகளால் பிணைத்துக் கொண்டு முழு யோக நிலையில் மிதந்தவாறு இந்த ஓவியத்தைப் படைத்துள்ளார். நீரின் நடுவே கைகளில் குச்சியால் பொருத்தப்பட்ட பேனாவைக் கொண்டு, பல மணி நேரம் மனதை ஒருமுகப்படுத்தி, துல்லியமாக இந்திய வரைபடத்தை வரைந்து முடித்துள்ளார்.
ஓவியம் கரையும் அபாயமும், கிணற்றுக்குள்ளே விஷப் பாம்புகளின் நடமாட்டமும் இருந்தபோதிலும், எதைப் பற்றியும் அஞ்சாமல் தனது மன உறுதியால் இந்தச் சாதனையை அவர் எட்டியுள்ளார். “படைக்கும் அஞ்சான், பாம்புக்கு அஞ்சான், இந்தியன்!” என்ற தீவிர தேசப்பற்றுடன் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
ஒரு கலைஞனாகவும், பெருமைமிக்க இந்தியனாகவும் தனது தாய்நாட்டிற்காக இந்த யோக நிலை ஓவியத்தைச் சமர்ப்பிப்பதில் பெரும் பெருமிதம் கொள்வதாகக் கூறியுள்ள கலைஞர் யூ.எம்.டி. ராஜாவின் இந்த வீரம் செறிந்த கலை முயற்சியைக் கண்டு கோவை மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.