நாகப்பட்டினம்,ஆக.11-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சி ஜீவாநகர் மெயின் ரோடு அருகில் விற்பனைக்காக தனியார் வீட்டு மனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் மயானம் அருகில் உள்ள முடிக்கொண்டான் ஆற்றுக்கரையில் அமைந்துள்ளது.
இடுக்காட்டிற்கு செல்ல பதிதாக வீட்டுமனைகள் அமையும் பகுதியை கடந்து செல்ல சாலை வசதி வேண்டியும், வீட்டு மனைகள் அமைக்கும் இடத்தில் இருந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் அறிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், நாகப்பட்டினம் தாசில்தார் ராஜ்குமார், திட்டச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் வருவாய்த் துறையினர், போலீசார் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சு வார்த்தையில் சுடுகாட்டிற்கு செல்ல தனியாக சாலையும், வாய்க்காலை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.