நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் திருமருகல் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) துரை சந்தானம் வரவேற்றார். இதில் திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 பள்ளிகளில் இருந்து 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். கவின் கலை, நுன்கலை, இசை, வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், மற்றும் நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் செய்திருந்தார். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் துர்கா நன்றி கூறினார்.