கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் உள்ள அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு அறக்கட்டளை நிறுவன துணைத் தலைவர் ஓ. முகமது உசேன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் அமுதன் மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில், அறக்கட்டளை நிறுவன இணைச் செயலாளர் அ. சிராஜுதீன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கல்லூரி துறைத் தலைவர்கள் சுதந்திர தினத்தின் சிறப்புகள், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு, மாணவர்களின் கடமைகள் மற்றும் தேசப்பற்றின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் கல்லூரி அலுவலர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.