திருச்சி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. மலைக்கோட்டை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, தெப்பக்குளம், மேலபுலிவார் ரோடு வழியாக சென்று மரக்கடையில் நிறைவடைந்தது.
சுதந்திரத்தை பேணிக்காப்போம், தாய்நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த பேரணியில், 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர். அவர்கள் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட தேசபக்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்ற பேரணியில், மாநில இணைப் பொருளாளர் டாக்டர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்றி, மூன்று நாட்கள் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.