கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை பி பிளாக் வளாகத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242-C மாவட்டத்தின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா நடைபெற்றது.
பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறியும் வகையில் இந்த சேவை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
லயன்ஸ் மாவட்டம் 3242-C-ன் நிதி உதவி, அருணா அபை ஆஸ்வால் அறக்கட்டளை மற்றும் கிராப்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி உதவி, பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் மூலம் இந்த சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் பழனிசாமி, 3242-C லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பி.எஸ். செல்வராஜ், திட்டத் தலைவர் நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மை விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் சீனிவாசன் கலந்து கொண்டு நடமாடும் வாகன சேவையை துவக்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குனர் டாக்டர் அருணா ஆஸ்வால், பி.எஸ்.ஜி. புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, கிராப்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவன தலைவர் சீனிவாசன் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் பன்னாட்டு இயக்குனர்கள், லயன்ஸ் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.. .
இந்த சேவை திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் ஜானகிராம் மற்றும் முத்துசாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.