காரைக்கால் மக்கள் நல இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.வின்சென்ட் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காரைக்கால் காமராஜர் சாலை விரிவாக்கம், பட்டேல் நகரில் வாய்க்கால் மற்றும் காலி மனைகளில் ஆகாயத் தாமரை செடிகளும், நாணல் செடிகளும் காடுபோல் வளர்ந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழைநீர் வாய்கால்களில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக மாறி வருகிறது. மேலும், நாணல் செடிகள் வளர்ந்து வெடித்து அதிலிருந்து வெள்ளை நிற பஞ்சுகள் காற்றில் பரவி அப்பகுதியிலுள்ள வீடுகளில் புகுவதால், அதை சுவாசிப்பவர்கள் சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சிக்கு எழுத்துப்பூர்வமாக பட்டேல் மற்றும் உசேன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மழைக்காலம் தொடங்கி விட்டால், வாய்க்கால்களில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் மழைநீர் ஓட வழியில்லாமல் வீடுகளுக்குல் புகும் ஆபத்து உள்ளது. எனவே, பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் மக்கள் நல இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்