S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800
காரைக்கால்: காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதி மற்றும் துய்ப்ளக்ஸ் வீதி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டியைத் தாண்டி குப்பைகள் சாலையில் சிதறிக் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், அப்பகுதி சுகாதாரமற்றும், அசுத்தமாகவும் காட்சியளிக்கிறது.
சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பைகள் மீது பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் குப்பைகளை முறையாக அகற்றி, அப்பகுதியில் தொடர்ந்து தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தூய்மைப்பணிகளை ஒப்பந்த விதிகளின்படி சரிவர மேற்கொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காரைக்கால் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, தூய்மைப்பணிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.