11 வழித்தடங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு மேயர் ஜெகன் ஆய்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொறுப்பேற்றது முதல் மாநகராட்சியின் சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு சாத்தியமில்லை என வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அதனை சவாலாக ஏற்றுக்கொண்ட மேயர் ஜெகன் அங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியை முன்னெடுத்தார். தற்போது தருவைகுளம் உரக்கிடங்கு பசுமைக் காடாக மாறியுள்ளதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநகராட்சியின் முயற்சிக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
இந்த சாதனையை பொதுமக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தருவைகுளம் உரக்கிடங்கு எவ்வாறு பசுமைக் காடாக மாற்றப்பட்டது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 12-வது மையவாடியை பசுமைப் பகுதியாக மாற்றும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் போதிய பராமரிப்பின்றி காணப்பட்ட இந்த மையவாடியில், மேயர் ஜெகன் நடவடிக்கையின் பேரில் கடந்த 2022-ஆம் ஆண்டு 12-வது மையவாடிக்கு செல்லும் 11 வழித்தடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன.
தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 12-வது மையவாடிக்கு செல்லும் 11 வழித்தடங்களின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் இன்று அதிகாலை நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். இன்னும் சில தினங்களில் 11 வழித்தடங்களின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தருவைகுளம் உரக்கிடங்கை பசுமைக் காடாக மாற்றியதைத் தொடர்ந்து, தற்போது 12-வது மையவாடிக்கு செல்லும் 11 வழித்தடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு, அப்பகுதியை பசுமையான சுடுகாடாக மாற்றும் முயற்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வின்போது முன்னாள் மாமன்ற உறுப்பினரும், திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன், திமுக பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், சுகாதார அலுவலர் ராஜபாண்டி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.