கோவையில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை மூன்று நாட்கள் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக இஸ்கான் கோயம்புத்தூர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை கொடிசியா வளாகம் அருகே அமைந்துள்ள இஸ்கான் – ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலில் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வு செப்டம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்கானின் மூத்த ஆன்மிகத் தலைவர் பக்தி விநோத ஸ்வாமி மகாராஜ், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செப்டம்பர் 4-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறுகின்றன.சிறப்பு வழிபாடு, அகண்ட நாம சங்கீர்த்தனம், ஆன்மிக சொற்பொழிவுகள், பாலகோபால அபிஷேகம், ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு, கோ பூஜை, தீப ஆரத்தி, கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

விழாவின் முக்கிய சிறப்பம்சமாக மாலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை 1,008 கலசங்களைக் கொண்டு மாபெரும் அபிஷேகம் நடைபெற உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மற்றும் செம்புப் பாத்திரங்களில் தயார் செய்யப்பட்ட 1,008 கலசங்களில், நாட்டின் பல்வேறு புனித நதிகள் மற்றும் தீர்த்தத் தலங்களில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீர் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த அபிஷேக நிகழ்வில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்கான் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஒரு மாதமாக கோவை முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வேடமணிதல், ஓவியம், பாடல், நாடகம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களின் இறுதிப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இளைஞர்களுக்காகவும் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவை சந்திரா இளைஞர் குழுவினர் சார்பில் சிறப்பு நாடகமும் பொதுமக்களுக்காக நடத்தப்பட உள்ளது.

மேலும், இஸ்கான் நிறுவனர் ஆச்சார்யர் ஸ்ரீல பிரபுபாதரின் அவதார தினமான வியாச பூஜையும் செப்டம்பர் 4-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

இதனிடையே, பல்லடம் மகாலட்சுமி நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இஸ்கான் மையத்திலும் ஜன்மாஷ்டமி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாத விநியோகம் நடைபெற உள்ளது.

செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த மூன்று நாள் விழாவில் பக்தர்கள், குடும்பத்தினர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெறுமாறு இஸ்கான் கோயம்புத்தூர் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *