நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் கலையரசி தலைமை தாங்கினார்.
உதவி இயக்குனர் தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 450-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். முகாமில் டாக்டர்கள் சிவசூரியன், பெரோஸ் முகமது, வாஞ்சிநாதன், பராமரிப்பு உதவியாளர் கிருஷ்ணகுமார், செயற்கை முறை கருவூட்டலாளர் சீனிவாசன் உள்பட கால்நடை பராமரிப்பு மருத்துவ குழுவினர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.