தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே மூலனூர் வேளாண்மைத் துறை வேளாண்மை அலுவலர் சுகன்யா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகாவீர் சிங் என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி 23 கிலோ 590 கிராம் வெள்ளிப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்து, தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயலட்சுமி மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரிடம் வெள்ளிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.