நாகப்பட்டினம்,செப்.14-
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்ப்பிறை சதுர்த்தி தினத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வளர்ப்பிறை சதுர்த்தி தினமான இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் பல்வேறு வடிவங்கள் மற்றும் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.
நாகை மாவட்டம் திருமருகலில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தேவையான பூஜை பொருட்களான பூ, பழம், தேங்காய் போன்ற பொருட்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனர். சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெறுவதற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 51 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலமாக 27 சிலைகள் திருப்புகலூர், அண்ணாமண்டபம், திருமருகல் வழியாக நடுக்கடையில் ஒன்றிணைத்து அங்கிருந்து திட்டச்சேரி வழியாக விநாயகர் சிலைகள் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நாகூர் வெட்டாற்றில் கரைக்கப்பட்டது.
முன்னதாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் அனைத்திற்கும் மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தை இந்து முன்னணி விநாயகர் குழு கோட்டச்செயலாளர் கணேஷ், ஊர்வல ஒருங்கிணைப்பாளர் பாலு ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சதிஷ்கண்ணா, ஒன்றிய பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் விவேக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.