செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், தூய்மை இந்தியா திட்டம் 2.0, எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் திடக்கழிவு திட்ட விதிகள் 2026-ன் கீழ் பேருராட்சிகளின் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளுக்கிணங்க குப்பை கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், ஈரக்கழிவுகள், இயற்கை/பொருள் கழிவுகள், உலர் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள், அபாயகரமான மற்றும் சுகாதாரக் கழிவுகள் என கழிவுகளை 4 வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.
கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்குவதன் மூலம், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியும், இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன், பேரூராசிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க முடியும். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே கழிவுகளை தரம் பிரித்து பேருராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. ந.லதா தலைமை வகித்தார்கள், துப்புரவு மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், பொதுமக்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலுள்ள குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து தங்கள் வீடு தேடிவரும் தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அக்டோபர் 1ம் தேதி முதல் குப்பை கழிவுகளை தரம் பிரித்து வழங்காதவர்களின் வீடுகளில் குப்பை சேகரிக்கப்படாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பேருராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என பேருராட்சி செயல் அலுவலர் திருமதி. ந.லதா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.