நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், உலக மண் தினத்தை முன்னிட்டு, சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்,உலக மண் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வுவழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோரை பள்ளத்தை சேர்ந்த, இயற்கை விவசாயி ராமர் கலந்து கொண்டு, “மண் ஆரோக்கியமே நாட்டின் உணவு பாதுகாப்பின் உறுதி” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். மேலும் மண்ணில் ஊட்டச்சத்து இழப்பு, இரசாயனப் பயன்பாட்டின் தாக்கம், கரிமப்பொருட்கள் அதிகரிப்பு மற்றும் இயற்கை வேளாண்மையின் நன்மைகள் குறித்த முக்கியமான தகவல்களை மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும், உதவி பேராசிரியை ரஞ்சிதம் வரவேற்று பேசினார். கல்லூரியின் தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமர் முன்னிலை வகித்தார். உணவுப் பாதுகாப்பு, வளமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மனித நல்வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய மண் வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பதன் அவசியம்
குறித்து வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக “மண் பூமியின் உயிர் இயந்திரம்” மற்றும் “மண் பேசுகிறது” எனும் தலைப்பில் புகைப்படம் எடுக்கும் போட்டியும் மண் மற்றும் உயிர்கள், – “மண்ணில் உள்ள சிக்கல்கள் ” மற்றும் “மண் பல்லுயிர் ” எனும் தலைப்புகளில் கட்டுரை போட்டிகளும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் பரத் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.