எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
திருநாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களில் ஒன்றான பள்ளிகொண்ட ரெங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன.
7ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பெருமாள், தாயார், கருடன் சன்னதி விமானங்களுக்கு பூஜித்த புனித நீரைக் கொண்டு மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதனை அடுத்து மூலவர் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.