வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பயிற்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்க பயிற்சிகள் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மை அலுவலர் சூரியமூர்த்தி முன்னிலை வகித்தார். வலங்கைமான் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விழாவை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் தொடங்கி வைத்தார்.
இக் கண்காட்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிக மற்றும்விற்பனைத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவரவர் சார்ந்த துறை பற்றியும், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து உரைத்தனர்.
கால்நடை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி இனாம் கிளியூர் உதவி கால்நடை மருத்துவர் சங்கவி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இயற்கை விவசாய நன்மை பற்றியும், பஞ்சம் காவியம், அமிர்த கரைசல் ஜீவாமிர்தம் ஐந்திலை கரைசல், மீன் அமிலம் ஆகியவை எப்படி தயாரிப்பது என்று நன்னிலம் பகுதியை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி உதயகுமார் கூறினார்.
வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் தற்போது விற்பனை செய்யப்படும் வேளாண் இடுபொருள்கள், கருவிகள் மற்றும் தனியார் பைப் கம்பெனி கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், சரவணன், சிரஞ்சீவி, கணேஷ் பிரபு, இலக்கியா மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் வரதராஜன், செல்வக்குமார், அஜந்தா, விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரியங்கா மற்றும் சதீஷ்குமார் செய்திருந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சிவலிங்கம் விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.