திருவொற்றியூர், பாரதியார் நகர் – மஸ்தான் கோவில் சந்திப்பு துவக்கம் வரையிலான, கடற்கரையை அழகுபடுத்தும் பணி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியான, 34.67 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதற்கான, பூமி பூஜை, கே.வி.கே., குப்பம் கடற்கரையில், தி.மு.க., 5 வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில், திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி சங்கர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செயற்பொறியாளர் விஜய குமாரி ஆகியோர் பங்கேற்று, பணிக்கான அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், 14 வது வார்டு கவுன்சிலர் பானுமதி சந்தர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இப்பணிகள், 1.9 கி.மீ., துாரத்திற்கு, 28 ஆயிரத்து, 100 சதுர மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், 347 சதுர மீட்டர் கட்டட பணிகளும் அடங்கும்.
திட்டப்பணிகள் முடியும் பட்சத்தில், குழந்தைகள் விளையாடும் திடல், கைப்பந்து – கபடி மைதானம், குத்துசண்டை வளையம், உடற்பயிற்சி கூடம், தியான மண்டபம், சாலையோர வியாபாரிகளுக்கான தளம்.
சிற்பங்கள், கடைகள், சூரிய மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, ஐந்து ஒப்பனை அறைகள், செல்பி ஸ்பாட், நடைபாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்