நீச்சல் பழக குழந்தைகளை கிணற்றுக்கு அழைத்துச் சென்ற தாய் குழுந்தைகள் உட்பட பரிதாபமாக நீரில் மூழ்கி பலி
அணைக்கட்டு,ஏப்.30;
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவரின் மனைவி பவித்ரா (30) இவர்களது குழந்தைகள் ரித்திக் (9), நித்திகா ஸ்ரீ (7) ஆகிய மூன்று பேர் வீட்டிற்க்கு அருகே உள்ள கிணற்றில் தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு நீச்சல் பழக்குவதற்காக தாய் பவித்ரா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள விவசாய கிணற்றிற்கு சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக தாய் பவித்ரா உட்பட மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
இதனிடையே கிணற்றுக்கு சென்ற மூவரும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சமடைந்த கணவர் சுரேஷ் அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு கிணற்றில் சென்று பார்த்துள்ளார். அப்போது மகள் நித்திகா ஸ்ரீ சடலமாக மிதப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், கிணற்றில் மிதந்த நித்திகா ஸ்ரீ உடலை மீட்டதுடன் மற்ற 2 பேரின் உடலை மீட்க சுமார் 1 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் மீட்டனர்.
இதனையடுத்து 3 பேரின் உடலையும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.