கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை 2 லட்சம் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு

.கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி கைது , உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்பு கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர்.பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மொத்தமாக 3 பேருக்கு எதிராக 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் எதிரிகளாக கருதப்படும் பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும், வழக்கின் புகார்தாரர்களான கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர் அருப்புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் பேராசிரியர்கள் என சுமார் 104பேரிடம் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது .

இது குறித்து வழக்கு விசாரணை நிறைவுபெற்று நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்தார்….

மேலும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்பு நேற்று மதியம் நடைபெற்ற வாதத்தில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் சுரேஷ் நெபோலியன் , தீர்ப்பு கூறிய நாள் அன்றே தண்டனையை கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்பு வாதத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், மேலும் குற்றம் குற்றம் சாட்டப்பட்ட பிரிவுகளை 5 பிரிவுகளை குறைத்து, தண்டனையை குறைக்க வேண்டும் எனவும் நிர்மலாதேவி வழக்கறிஞர் வாதிட்டார்.இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் நீதிபதி பகவதி அம்மாள் இன்றைக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இதன் பின்பு நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலா தேவி மதுரை மத்திய சிறை அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.

இன்று மீண்டும் மாலை 2.30 மணிக்கு மேல் இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது.பாதிக்கப்படுவதாக கூறும் நபர்கள் தற்போது தங்கள் பணிகளை பார்த்துக் கொண்டிருப்பதால் தண்டனை குறைக்க வேண்டும் என நிர்மலா தேவி வழக்கறிஞர் வாதம் செய்தார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிர்மலா தேவி இத்தகைய செயல் சமுதாயத்திற்கு எதிரான செயல் என தெரிவித்தார்.உத்திர பிரதேசத்தில் இது போன்ற வழக்கில் கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தை வைத்தார்.

இரு தரப்பு வாதம் நிறைவு பெற்ற பின்பு
10 வருடம் சிறை தண்டனையும் 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் மேலும் அபராத தொகை கட்டவில்லை எனில் மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *