பரமத்தி வேலூர், ஜன.9-
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை முன்னாள் எம்.எல்.ஏ- வும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான கே.எஸ் .மூர்த்தி தொடங்கி துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த முகாமில் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் மற்றும் இதர இரத்தப் பரிசோதனை, மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காச நோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிறப்பு பொது நல மருத்துவம், பொது நல அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மன நலம், கதிர்வீச்சு மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இயன்முறை மருத்துவம், இருதயநோய் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய பாரம்பரிய மருத்துவம் ஆகிய 17 துறைகளை சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான கே .எஸ். மூர்த்தி நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் பூங்கொடி நாமக்கல் மருத்துவக் கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் குணசேகரன்,கபிலர்மலை மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் வக்கீல் சரவணக்குமார், கபிலர்மலை வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம், கபிலர்மலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அருண், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செவன் ஸ்டார் மோகன், ஒன்றிய கழக பொருளாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள்,வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.