தஞ்சைத் தமிழ் மன்றத்தின் சனவரி திங்களுக்கான திங்கள் கவியரங்கம் வடலூர் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர் செயலர் தமிழ்ச் செம்மல் இராம வேல்முருகன் தலைமையேற்றார்.
மேட்டுக்குப்பம் புலவர் ஞானதுரை உள்ளிட்ட கவிஞர் பெருமக்களும், திருக்களப்பூர் சன்மார்க்க சங்க நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். குடந்தைக் கவிஞர் பாலுகோவிந்தராஜன், தமிழ்ச் செம்மல் இராம வேல்முருகன், திருச்சி கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன், புதுவைக் கவிஞர் ராமதாஸ் காந்தி மற்றும் மதுரைக் கவிஞர் முத்துவிஜயன் ஆகியோர் தலைமையில் ஜந்து கவியரங்கங்கள் வள்ளலாரைக் குறித்து நடைபெற்றது.
சென்னை, புதுவை, திருச்சி, மதுரை, கோவை, காரைக்குடி, ஈரோடு, குடந்தை, தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களிலிருந்து வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவியரங்கத்தில் கலந்து கொண்டனர்.
கவியரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை சன்மார்க்கச் சங்க சம்மந்திகள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் உணவளித்தனர். வடலூர் தொழிலதிபர் திருமிகு இராமலிங்கம் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கினார்.
புதுவை சுத்தசன்மார்க்கம் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கியது. காட்டுமன்னார்குடி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு நா.முருகுமாறன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கவிஞர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். முன்னதாக திருக்கோவிலூர் ஜீவ சீனுவாசன் குழுவினரின் திருவருட்பா இன்னிசை விருந்தும், மாணவிகளின் நடனமும் நடைபெற்றது. கவியரங்கத்துக்கு வருகை தந்தவர்களை தஞ்சைத் தமிழ் மன்றத் துணைத் தலைவர் கவிஞர் சுகுமார் வரவேற்றார். இணை இயக்குநர் மதிவாணன் நன்றியுரை ஆற்றினார்.