திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் ஏலவார் குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில்உள்ளது. இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது. வருடம் தோறும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோயிலில் பெயர்ச்சி விழா அதிவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குரு பகவானை வழிபட்டு செல்லும் சிறப்பிற்கு உரியது.கோயிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் ஜூலை 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நாள் தோறும் மண்டலபிஷேக பூஜை நடந்து வருகின்றன. மண்டலாபிஷேக பூர்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதனை முன்னிட்டு கடந்த 28-ஆம் தேதி புதன்கிழமை காலை விநாயகர், சப்த மாதா,கல்யாண சாஸ்தா,வீரபத்திரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மாலையில் நான்கு சன்னதிகளிலும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.29- ஆம் தேதி வியாழக்கிழமை கலங்காமற் காத்த கணபதி,வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியர்,துர்க்கை, நவக்கிரக யாகம், பூர்ணா ஹீதி,பஞ்ச மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
மாலை முதல் இரவு ஆபத்சகாயேஸ்வரர் பெருமாளுக்கு 1008 கலச பூசைகள்,குரு தட்சிணாமூர்த்திக்கு 108 சங்கு பூஜை, ஏலவார்குழலி கலச பூஜை யாகம், நிறை வேள்வி, முதல்கால யாக பூஜைகள் நடந்தன.30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகளும்,அதனைத் தொடர்ந்து ஆபத்சகா யேஸ்வரர் பெருமானுக்கு 1008 கலசாபிஷேகமும்,குரு தட்சிணாமூர்த்திக்கு 108 சங்காபிஷேகமும்,ஏலவார்குழலிக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமு, செயல் அலுவலர் சூரியநாராயணன், கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.