திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இணைந்து நடத்திய இந்த நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், கல்லூரி இயக்குனர் டிடிகே.ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கே.மங்கையர்க்கரசி பங்கேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு பற்றி விளக்கி கூறினார். மேலும் பெண்கள் தங்களின் எதிர்கால இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், தங்களுடைய நாட்டம் வேறு திசையை நோக்கி செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும் கல்லூரி வாழ்க்கையில் கல்வியைத் தவிர வேறு எந்த ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும், செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தினால் பல்வேறு எதிர்மறை விளைவுகளை சந்திக்க கூடும் என்றும் எச்சரித்தார். இந்த நிகழ்வில் கலாம் பவுண்டேஷன் நிர்வாகி சீ.கேசவராஜ், அன்பால் அறம் செய்வோம் சேவை குழு அசாருதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் போதை விழிப்புணர்வு பற்றிய ஓரங்க நாடகம் நடைபெற்றது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்வை தமிழ்த் துறைத் தலைவர் பாபு நிகழ்வை ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் குறும்பட உதவி இயக்குநர் முகமது ஜியா உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியில் வணிகவியல் துறை தலைவர் ராகவேந்திரன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.