தருமபுரி நகரில் 50 ஆண்டு காலமாக நகராட்சி புறநகர் மற்றும் நகர்ப்புற பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து, தமிழ்நாட்டிலே முதல் முறையாக தனியார் பங்களிப்புடன் சோகத்தூர் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஐந்தாம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது.
இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றதால், பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில், 200க்கும் மேற்பட்ட கடைகளில் வணிகர்கள், சிறு வியாபாரிகள் கடை வைத்து வருகின்றனர்.
இதனால் இவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் தவிர்த்து வருகின்றனர். மேலும் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தாலும், அனைத்து பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் என தெரிவித்த நிலையில், இப்பொழுது பேருந்து வராததால் வருவாய் இல்லாமல் தவிப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி சொந்தமான 200 கடைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள 1500 க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பேருந்து நிலையத்தின் மூலம் நகராட்சிக்கு மாதம் தோறும் 1.50 கோடி ரூபாய் வருமானம் வந்த நிலையில், 55 இலட்சம் வருவாய்க்காக நகராட்சி பேருந்து நிலையத்தை மாற்றி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும், நகராட்சிக்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வராததால், நான்குரோடு பகுதியில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மார்க்கமாக செல்லுகின்ற பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள், வணிகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் நகராட்சியின் நலனை கருத்தில் கொண்டு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லுகின்ற பேருந்துகளை, பழைய பேருந்து நிலையத்திற்கே கொண்டு வர வேண்டும் என வணிகர்கள், சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்