திருவாரூர்., பிப்.18
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் முக்கியமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
அதனை நம்பிய பெண்கள் திமுகவிற்கு வாக்களித்த நிலையில், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
திமுக கூட்டணி சுமார் 45% வாக்குப்பகிர்வையும், அதிமுக கூட்டணி சுமார் 39% வாக்குப்பகிர்வையும் பெற்றன. வெறும் 6% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த 2021 மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது.
“நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு செல்லும்” வழக்கம் கொண்ட திமுக, ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை மறந்து பெண்களை கை கழுவிவிட்டது. ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து, திடீரென 2023 செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றால் 1000 ரூபாயை 2000 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என திமுக தலைவர் அறிவித்துள்ள நிலையில், அவரது சொந்த ஊரான திருவாரூரில், “பாக்கி 28000 எங்கே..? No Vote to DMK” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், மகளிர் உரிமைத்தொகை 2021ல் இல்லை, 2022இல் மகளிர் உரிமைத்தொகை இல்லை, 2023 ஆகஸ்ட் வரை மகளிர் உரிமைத்தொகை இல்லை. விடுபட்ட அந்த 28 மாதங்களுக்கான 28 ஆயிரம் உரிமைத்தொகை எங்கே. .? என்று கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் திமுகவுக்கு ஓட்டு இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
” திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் திமுகவுக்கு ஓட்டு கிடையாது என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.”