திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் – கொரடாச்சேரி சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 371 குவிண்டால் பருத்தி ரூ.24.31 லட்சத்துக்கு ஏலம் போனது. மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 99 க்கு ஏலம் போனது.

டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பின்னர் கோடை சாகுபடியாக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

குடவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில் நடப்பு பருவத்திற்கான பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் கண்ணன் உத்திரவின் பேரில் நடைபெற்றது. பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியினை கொண்டு வந்தனர்.

கரூர், ஈரோடு, சேலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 99 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 699க்கும், சராசரி விலையாக குவிண்டால் 6 ஆயிரத்து 520க்கும் ஏலம் போனது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் தங்களது பருத்தியினை நன்கு உலர்த்தி கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சரியான எடை மற்றும் நல்ல விலையில் பருத்தியினை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து பயன் பெற ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *