இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தெரு பகுதிகளில், 20 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு, வினோதமான ஒரு வகையான நோய் பரவி வருகிறது. அவற்றின் உடல் நிறம் மாறி, அச்சமூட்டும் வகையில் காணப்படுகிறது. தோலில் அரிப்பு ஏற்பட்டு, நாய்கள் சொறிந்து கொண்டே இருக்கின்றன.
இதனால், நாய்களின் தோல்கள் உறிந்து போய் உள்ளன. இது, சொறி நோயாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நோயால், நாய்கள் பலமிழந்து சோர்வாக இருக்கின்றன.
இந்த நாய்கள் பொது மக்களை கடித்தால் அல்லது இதன் மூலம், மனிதர்களுக்கு தொற்று நோய் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை, பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும், அல்லது நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி தேவையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.