குண்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தாராபுரம், குண்டடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சூரியநல்லூர், கொக்கம்பாளையம், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு குண்டடத்தில் உள்ள சமுதாயநலக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், இம் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் 857 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜா, குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் எஸ்.சந்திரசேகரன் மற்றும் குண்டடம் பகுதியைச் சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *